அண்மை

வாடகை வீடு - கவிதை

 

வாடகை வீடு - கவிதை

இந்த வீட்டின் குடித்தனங்கள்

போலே

இந்த உலகிலும் எதுவுமே

நிலையில்லை!


வாடகை கொடுத்து வாழும்

சமூக அகதிக்கு

வருடமோ ஒரு

புதுமனை புகுவிழா!


பெருமூச்சோடு நினைத்துப்பார்க்கிறேன்!

பிறந்தது ஒரு வீட்டில்

வளர்ந்தது ஒரு வீட்டில்

படித்தது ஒரு வீட்டில்

இதோ இன்றொரு வீட்டில்


வாடகையிலே

எங்களுக்கு வாழ்க்கை

கழிகிறது!


இதோ இந்த

வீட்டின் சுவர்களை பார்!

யாரோ ஒரு குழந்தையின்

கைவண்ணத்தில்

வீட்டின் நினைவுகள்

நிழலாடுகிறது

அது

மானா? நாயா?

என்ற சிந்தனையிலே

மாதங்களும் கடக்கிறது


பால் காரரையும்

பேப்பர் காரரையும்

மாற்றலாமா? என்ற சிந்தனை


துணிகளுக்கும்

கொடிகளுக்குமான

பழக்கம் 

எப்போதும் அறுபடலாம்

என்ற எண்ணம்


தண்ணீர் தேங்கும் தெரு

கொசு பிடுங்கி எடுக்கலாம்


நாய்கள் நிரம்பிய தெரு

நம்மை கடித்தும் வைக்கலாம்


என்ன செய்ய?

புதிய புதிய

முகங்களுக்கும்

புதிய பதிய

முறைகளுக்கும்

பழக வேண்டியுள்ளது.


சொந்த வீடு உள்ளவர்கள்

அதிஷ்டசாலிகளோ?


மனிதனால் எதையும்

கொண்டு போக முடியாதே


கொண்டு போக முடியவில்லை

என்றாலும்

குறைந்தபட்சம்

விட்டு செல்லவாவது முடியும்


அதற்கும் தகுதியில்லை

எங்களுக்கு


நாங்கள் விட்டு வந்த

நினைவுகளும்

இனி வாடகைக்கு…


தீசன்

1 கருத்துகள்

புதியது பழையவை